ஐபிஎல் பிக்சிங்: முட்கல் அறிக்கையில் சீனி, குருநாத், ராஜ்குந்த்ரா உட்பட 13 பேர் மீது குற்றச்சாட்டு!!
டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்சிங் நடைபெற்றது குறித்து விசாரணை நடத்திய முகுல் முட்கல் அறிக்கையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ்குந்த்ரா உட்பட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது பிக்சிங் மற்றும் பெட்டிங் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்டிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோரும் சிக்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் சிக்கினர்.

ஆனால் கிரிக்கெட் வாரியம் சார்பில் விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் பிக்சிங்குக்கும் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பும் இல்லை என்று கூறியது.
இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஐ.பி.எல். பிக்சிங் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை கமிஷனை உச்சநீதிமன்றம் அமைத்தது.
நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி பல்வேறு இடங்களுக்கு சென்று 4 மாத கால விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரியில் 170 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது முகுல் முட்கல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியது. மொத்தம் 13 பேர் மீது முகுல் முட்கல் கமிட்டி பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதில் பிசிசி தலைவராக இருந்த என். சீனிவாசன், ஐபிஎல் சிஇஓ சுந்தரராமன், சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுர உறுப்பினருமான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 7 பேரின் பெயர்களை மட்டும் உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டது.
மேலும் பிக்சிங் வழக்கு விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்தலை நிறுத்த வேண்டியதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஐபிஎல் பிக்சிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகிகளே ஈடுபட்டிருப்பதாக முட்கல் கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்று இறுதித் தீர்ப்பளித்தால் இரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications