சசிகுமார் ஐபிஎஸ் மரணத்தில் மர்மம்? கடிதம் சிக்கியதாக தகவல் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
ஆந்திரா: ஆந்திராவில் பணிபுரிந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சசிகுமார் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சசிகுமாரின் மரணத்தின் பின்னணியில் சமூக விரோத கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதை அடுத்து சிபிஐ விசாரணைக்கு ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் 2வது வீதியை சேர்ந்த குப்புசாமி, மயிலம்மாள் தம்பதியின் மகனான சசிகுமார் 29, ஐபிஎஸ் பயிற்சி முடிந்த உடன் ஆந்திரா மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் பாதேரூ ஏஎஸ்பியாக பணிபுரிந்தார்.
வியாழக்கிழமையன்று காவேரி என்னும் மலைவாழ் கிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிருக்கு போராடியக நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிதாபகரமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சசிகுமார் உயிரிழந்தார்.
சசிகுமார் மரண செய்தி சத்தியமங்கலத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சசிகுமார் மரணச் செய்தி கேட்டு விசாகப்பட்டினம் விரைந்து சென்ற அவரது பெற்றோர், மகனின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சசிகுமார் உடல் விசாகப்பட்டினத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்னராஜையா, போலீஸ் அதிகாரிகள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, பேசிய சின்னராஜையா சசிகுமார் உயிரிழந்த இடத்தில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை வெளியிடலாம் என பெற்றோர் சம்மதம் தெரிவித்தால் ஊடகத்திற்கு கொடுக்கப்படும் என்றார் அவர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சசிகுமார் உடல், விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூர் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து வாகனத்தில் சத்தியமங்கலம் கொண்டு செல்லப்படும் அவரது உடல் இன்று பிற்பகல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
சசிகுமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதப்படுகிறது. முதலில் பணியாற்றிய ஆலகட்டாவில் செம்மரக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்த சசிகுமார், விசாகப்பட்டினத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தார். இதனால் அவரது மரணத்தின் பின்னணியில் சமூக விரோத கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து சசிகுமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.