ஈராக் சண்டையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு
டெல்லி: ஈராக்கில் நடைபெற்றுவரும் சண்டை நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சதாம் உசேன் ஆதரவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, ஈராக்கில் தாக்குதல்களை நடத்தி பல நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஈராக்கில் ஸ்திரமற்றதன்மை நீடித்து வருகிறது.
சவுதிக்கு அடுத்து ஈராக்
இந்தியாவை பொறுத்தளவில் சவுதி அரேபியாவுக்கு அடுத்தபபடியாக ஈராக்கில் இருந்துதான் கச்சா எண்ணையை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த கச்சா எண்ணை இறக்குமதியில் 13 சதவீதம் அளவுக்கு நாம் ஈராக்கை சார்ந்துள்ளோம்.
விலை உயர்கிறது
ஈராக்கில் நடைபெறும் சண்டையால் கச்சா எண்ணை விலை, மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 106.94 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை, தற்போது, 110.31 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. ஈராக்கில் சண்டை நீடித்தால், கச்சா எண்ணை விலையும் கூடிக்கொண்டே செல்லும் என்பது பொருளாதார நிபுணர்கள் கணிப்பு.
எண்ணை ஏற்றுமதி பாதிக்குமா?
ஈராக்கின் வடக்கு பகுதியில் தற்போது கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். அவர்கள் எண்ணை வளம்மிக்க தெற்கு ஈராக்கை நோக்கி முன்னேறியபடி உள்ளனர். தெற்கு ஈராக் பகுதியில்தான், அந்த நாட்டின், முக்கால்வாசி எண்ணை கிணறுகள் செயல்படுகின்றன. தெற்கு ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறினால் எண்ணை ஏற்றுமதி தடைபட்டு இந்தியாவுக்கு கச்சா எண்ணை தட்டுப்பாடு ஏற்படும்.
ஒரு மாதம் தாங்கும்
இந்தியாவிலுள்ள எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் பதினைந்து நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரைக்கும்தான் கச்சா எண்ணையை சேமித்து வைப்பது வழக்கம். எனவே ஈராக்கில் இருந்து வரும் கச்சா எண்ணையில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதற்கடுத்த இரு வாரங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரித்தேயாக வேண்டிய கட்டாயம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும்.