ஆந்திரா கவர்னர் நரசிம்மன் அடுத்த துணை ஜனாதிபதியா?
துணை ஜனாதிபதியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநரான நரசிம்மன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி: துணை ஜனதிபதியின் பதவி காலம் வரும் ஆகஸ்டு மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மனுக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் ஜூலை மாதத்தோடு ஜனாதிபதின் பதவி காலம் முடிவடைய உள்ளது. அப்பதவிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்து வருகிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவரான ஜாபர் ஷெரிப் கூட மோகன் பகவத் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதியின் பதவி காலமும் நிறைவடையும். அப்பதவிக்கு தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக பதவி வகிக்கும் நரசிம்மன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது எழுந்த பல்வேறு விஷயங்களை திறமையாகக் கையாண்டார் என அவரைப் பாராட்டுகின்றனர். அவர் 1945ல் அப்போதைய சென்னை மாகாணத்தில் பிறந்தவர். 1968 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கப்படுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .