அர்ணாப்புக்கு 5 கோடி ரூபாய் சம்பளமா? திரி கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்
டெல்லி: டைம்ஸ்நவ் தொலைக்காட்சி சேனல் ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான அர்ணாப் கோஸ்வாமி மீது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.. அர்ணாப்பிற்கு 5 கோடி சம்பளமாமே என டிவிட்டரில் திரியை கொளுத்தி போட்டுள்ளார்.
சமீபத்தில், டெல்லி சட்டசபை எம்.எல்.ஏக்களுக்கான சம்பளத்தை உயர்த்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு சம்பளத்தை இருமடங்காக உயர்த்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்து அதை நிதித்துறை ஏற்றுக்கொண்டதாக தகவவல் வெளியாகியுள்ளது. அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலைதொடர்ந்து, வேலையே செய்யாத எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு அவசியமா? சம்பள உயர்வு எதற்கு? என்பது போன்ற தலைப்புகளில், டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனல் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.
Is it true? Arnab gets Rs 5 crore salary? https://t.co/w5sQSpH3Yv
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 24, 2015
இதனால் கோபமடைந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அர்ணாப்பிற்கு 5 கோடி சம்பளம் என்று கூறி வெளியான ஒரு டிவிட்டை ரீடிவிட் செய்து, அர்ணாப்பிற்கு 5 கோடி சம்பளமா? என்ற கேள்வியோடு வெளியிட்டுள்ளார்.
அர்ணாப் மட்டும் அதிக சம்பளம் வாங்கலாம்.. ஏன் எம்.பிக்கள் சம்பளம் வாங்க கூடாது என்ற அர்த்தத்தில் கெஜ்ரிவால் இதை செய்துள்ளார். ஆனால் எம்.பிக்களுக்கான சம்பளம் பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவாகுவது என்பதை கெஜ்ரிவால் வசதியாக மறந்துவிட்டார் போலும்.