ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெக்டேவர் நினைவு நாளுக்காக ஜூன் 21- ல் 'சர்வதேச யோகா தினம்'?
டெல்லி: சர்வதேச யோகா தினம் வரும் 21-ந் தேதியன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நாடு முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் ஹெக்டேவரை சிறப்பிக்கும் வகையில்தான் அவரது நினைவு நாளான ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினத்துக்கு மோடி அரசு பரிந்துரைத்ததாக சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, யோகாவின் சிறப்புகளை எடுத்து வைத்தார். அத்துடன் ஜூன் 21-ந் தேதிக்கு உலகம் முழுவதும் பல்வேறு சிறப்புகள் இருப்பதால் அன்றைய தினத்தை 'சர்வதேச யோகா தினமாக' அனுசரிக்கவும் மோடி பரிந்துரைத்திருந்தார்.

இதனை 177 நாடுகள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்று ஜூன் 21-ந் தேதியை 'சர்வதேச யோகா' தினமாக அறிவித்தது. இந்த சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் ஜூன் 21-ந் தேதியன்று யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா கோட்பாடுகளின் தந்தையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெக்டேவரின் நினைவுநாள்தான் ஜூன் 21. ஹெக்டேவரை சிறப்பிக்கும் வகையில்தான் மோடி இந்த நாளையே சர்வதேச யோகா தினத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறார்; ஐ.நா.வும் இதை ஏற்றுக் கொண்டதால் நாடு முழுவதும் யோகா தினத்தை ஜூன் 21-ல் அனுசரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்கின்றன இடதுசாரி சக்திகள்..
ஏற்கெனவே யோகா நிகழ்ச்சி ஒரு இந்துத்துவா செயல்பாடு என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஹெக்டேவரின் நினைவு நாளுக்காகத்தான் யோகா தினம் என வெளியாகி இருக்கும் புதிய தகவலால் சர்ச்சை மேலும் வெடிக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications