ஒருவேளை இதுவா இருக்குமோ.. 3 ரயில் முட்டிக்கொண்டது எப்படி? விபத்துக்கு சொல்லப்படும் முக்கிய காரணம்
புவனேஷ்வர்: நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஐ தொட்டு இருக்கும் நிலையில், இதற்கான முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சனையை பெரும்பாலானோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளாகி 12 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 280 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் ரயில் விபத்துக்கான முதன்மை காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் இந்திய ரயில்வே அதிகாரிகள் இறங்கி இருக்கிறார்கள்.

ஷாலிமர் - சென்னை இடையிலான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 900 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இதுகுறித்து பல முனை கூட்டு விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோட்டை தாண்டி செல்ல பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதாக கூறுகிறது.
சிக்னலை பார்த்தவுடன் சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், லூப் லைனுக்குள் புகுந்து ஸ்டேசனரி பொருட்களை எடுத்து சென்ற சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டு இருக்கிறது. அதே சமயத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து வந்த சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் அங்கு வந்து விபத்தில் சிக்கியுள்ளது. அதில் 2 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன.

அதேபோல் ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். ரயில்வே அதிகாரிகள் சிக்னலில் குளறுபடி அல்லது கோளாறு ஏற்பட்டதா அல்லது அது ரயில் ஓட்டுநருக்கு முறையாக தெரிந்ததா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். அதே நேரம் ரயில் தடம் புரண்டது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ காரணத்தையும் இந்திய ரயில்வே தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள், கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகார்கள் முன்னிலையில் பிரதமர் அலுவலகத்தில், ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா இந்த விபத்து குறித்து விரிவான விளக்கத்தை அளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications