இஷ்ரத் வழக்கு: சஸ்பென்ட் ஏடிஜிபி பி.பி. பாண்டே ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு கோர்ட் நோட்டீஸ்!
அகமதாபாத்: இஷ்ரத ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிறையில் இருக்கும் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. பி.பி. பாண்டேவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு அகமதாபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் அறிவித்தனர். மேலும் போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள்தான் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் குஜராத் ஏ.டி.ஜி.பி.யாக இருந்த பாண்டே உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பி.பி. பாண்டேதான் இந்த போலி என்கவுண்ட்டரில் அதிக பங்கு வகித்தவராக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. அதே நேரத்தில் இந்த இந்த என்கவுண்ட்டருக்கு காரணமானவராக சொல்லப்பட்ட குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய பாஜக தலைவரான அமித் ஷாவை சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் ஏ.டி.ஜி.பி.யாக இருந்த பி.பி. பாண்டே கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது பி.பி. பாண்டே ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி உபாத்யாயா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.