காஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான 2 நாட்கள் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் விலாயத் ஆப் ஹிந்த் எனும் தங்களது கட்டுப்பாட்டில் ஒரு மாகாணத்தை உருவாக்கிவிட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் தீவிரவாதிகளை ஈர்க்கும் வகையில் ஒரு பொய்யான பிரகடனத்தையே ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டிருக்கிறதாம்.
காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் அம்ஷிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மே 10-ந் தேதி மோதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் தங்களது கட்டுப்பாட்டில் ஒரு மாகாணத்தை உருவாக்கிவிட்டோம் என பிரகடனம் செய்திருக்கிறது ஐ.எஸ். அமைப்பு.

அரபி மொழியில் விலாயத் ஆப் இந்த் என இதனை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ். இயக்கம். ஆனால் இதனை நிராகரித்துள்ளனர் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள்.
மேலும் அப்படி எந்த ஒரு பகுதியும் தீவிரவாதிகள் வசம் இல்லை. சர்வதேச அளவில் தங்களது இயக்கத்துக்கு ஆட் சேர்க்க இப்படி ஒரு பொய்யான பிரசாரத்தை ஐ.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது என்கின்றனர் அந்த அதிகாரிகள்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் எந்த தீவிரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தினாலும் தாங்களே நடத்தியதாக பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications