"மயில்-வேல்" வழிபாடு நடத்தும் யாசிதிகளை ஆதரித்ததால் ரவிசங்கருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
டெல்லி: மலேசியா சென்றுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக்கில் சிறுபான்மையினராக இருக்கும் யாசிதி இனத்தவருக்கு ஆதரவாக ரவிசங்கர் செயல்பட்டதாலேயே ஐ.எஸ். தீவிரவாதிகள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
சிரியா, ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இந்த தனிநாட்டுக்குள் வாழும் பிற மதத்தினர் இஸ்லாம் மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது பெருந்தொகையை பணமாக கொடுக்க வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.

இதற்கு உடன்படாதவர்களை படுகொலை செய்து வருகின்றனர். இப்படி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் ஈராக்கின் சிஞ்சார் பகுதிகளில் வசிக்கும் யாசிதி என்ற இனத்தவர். இஸ்லாமியராகவும் கிறிஸ்தவராகவும் இல்லாமல் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்ற மிகச் சிறுபான்மை இனம்.
இவர்கள் மயிலையும் வேலையும் புனிதமாக வழிபடுகிறவர்கள். தமிழ்நாட்டின் முருக வழிபாடு, வட மாநிலங்களின் ஸ்கந்த வழிபாடு போலவே யாசிதிகள் வழிபாட்டு முறை இருக்கிறது.
இதனால் தங்களை இந்தியாவுடன் தொடர்புடையவர்களாக எண்ணுகிறார்கள். இந்த யாசிதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் வேட்டையாடிய போது பாலைவனக் குன்றுகளில் பசியும் பட்டினியுமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதன் பின்னரே உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கின. இந்த யாசிதிகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்துப் பேசினர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ஈராக்கின் யாசிதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உதவிப் பொருட்களை வழங்கினார்.
அத்துடன் ஈராக்கில் அமைதி முயற்சிகளையும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மேற்கொண்டார். இந்த பின்னணியில்தான் ரவிசங்கருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மலேசியாவில் 'இந்துமத செயல்பாடுகளை' ரவிசங்கர் நிறுத்தாவிட்டால் கொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications