மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது ஐகோர்ட்.. முந்தைய உத்தரவு ரத்து!
இம்பால்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கலவரம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் இந்த கலவரங்களுக்கு காரணமாகச் சொல்லப்படுவது அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தான். தற்போது அந்த அறிவுறுத்தலை திரும்பப் பெற இம்பால் உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 10 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேரை காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
பதற்றம் மேலும் பரவாமல் தவிர்க்க மொபைல் இன்டர்நெட் சேவை அடிக்கடி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் பதற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும் காரணமாக சொல்லப்படும் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தற்போது திரும்பப்பெறப்பட்டிருக்கிறது.
அதாவது, மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவிகிதமாக உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இம்மாநிலத்தில் குக்கி உள்ளிட்ட பழங்குடி சமூக மக்களை தவிர, மலைவாழ் பகுதிகளில் வேறு யாரும் நிலம் வாங்க முடியாது. இப்படி சில சிறப்பு உரிமைகள் குக்கி மக்களுக்கு இருக்கிறது. எனவே அவர்களை போலவே தங்களையும் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்று மெய்தி மக்கள் கோரிக்கை எழுப்ப தொடங்கினர்.
சமீபத்திய மணிப்பூர் சட்டமன்ற தேர்தலின்போது, மெய்தி மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதேபோல மெய்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு தரப்பின் போராட்டமும் ஒரு கட்டத்தில் மோதலாக , பெரும் வன்முறையாக வெடித்தது. அப்போது தொடங்கிய வன்முறை இப்போது வரை நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அம்மாநில நீதிமன்றம் தனது அறிவுறுத்தலை நீக்க முடிவெடுத்துள்ளது.
அதாவது, மெய்தி இனத்தவரை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு அளித்த அறிவுறுத்தலை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது உயர்நீதிமன்றம். இதனால் மணிப்பூர் கலவரம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications