பெங்களூரில் ஐடி ரெய்டு.. காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளி.. ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைப்பு
பெங்களூருவில் குஜராத் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட் மற்றும் அமைச்சர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை ராஜ்ய சபா
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட் மற்றும் அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதைக் கண்டித்து ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலத்தில் வரும் 8ம் தேதி ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 கோடி பேரம் பேசப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைமை 44 எம்எல்ஏக்களை பெங்களுரூவில் உள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், இன்று ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தி வருகிறது. இது இன்று ராஜ்ய சபாவில் எதிரொலித்தது. ராஜ்ய சபாவின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் எம்பிக்கள் வருமான வரி சோதனைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
குஜராத்தில் பாதுகாப்பில்லை என்றுதான் பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைக் குறி வைத்தே இந்த வருமானவரி சோதனை நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் எம்பிக்களை கட்டுப்படுத்த ராஜ்ய சபா துணை சபாநாயகர் குரியன் முயற்சி செய்தார். அவர்களை இருக்கையில் அமருமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து, 10 நிமிடங்களுக்கு ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாளை வரை ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.