தங்கை பிரியங்காவிற்கு ராகுல் காந்தி முத்தம் கொடுத்ததையும் தப்பாக பேசும் உ.பி. பாஜக அமைச்சர்!
அமிர்தசரஸ்: ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட தனது சகோதரி பிரியங்கா காந்தியை பாசத்துடன் முத்தமிட்டு அன்பை பொழிந்தார். அண்ணன் - தங்கை இடையேயான இந்த பாச பிணைப்பு சமூக வலைத்தளங்களிலும் பரவி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது உடன் பிறந்த சகோதரிக்கு பாசத்துடன் கொடுத்த முத்தத்தை கூட விமர்சித்து உத்தர பிரதேச பாஜக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
முன்னதாக அரியானா மாநிலத்தின் குருஷோத்ரா மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாக தாக்கி பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-
யாரு.. ராகுல் காந்தியா? அவரு 'டிஸ்னி லேண்ட்' இளவரசராச்சே.. என்ன பாஜக இப்படி சொல்லுது?
கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 21 ஆம் நூற்றாண்டின் கவுரவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை பார்க்கும்போது "ஜெய் சியா ராம்" என்று கோஷமிடச் சொல்லுங்கள் எனவும் கடுமையாக சாடினார். மேலும், மகாபாரதத்தில் கவுரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட மாநிலம் இது எனவும், 21-ம் நூற்றாண்டின் கவுரவர்களை பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை அணிந்து, கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள் என்றும் ராகுல் காந்தி சாடியிருந்தார்.
பாசத்துடன் முத்தம் கொடுத்ததை
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசிய உத்தர பிரதேச பாஜக அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு பாசத்துடன் முத்தம் கொடுத்ததைக் கூட தவறாக பொருள்படும் படி விமர்சித்துள்ளார். இவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் பிரதாப் சிங் கூறியதாவது:- 50 வயதான பிறகு பொது இடத்தில் எந்த பாண்டவர் தனது சகோதரிக்கு முத்தம் கொடுத்தார்? சங்க பிரசாரகர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு எந்த பேராசையும் இன்றி தேசத்தை கட்டமைக்க தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்.
பாண்டவர்கள் செய்தார்களா?
ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்-சை கவுரவர்கள் என்று சொல்வதால் அவர் பாண்டவர் என அர்த்தம் கொள்ளப்படுமா? அவர் தன்னை பாண்டவராக நினைத்துக் கொண்டால்.. ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு 50 வயதில் பொது வெளியில் முத்தம் கொடுத்ததை போல பாண்டவர்கள் செய்தார்களா? இது நமது கலாசாரம் கிடையாது. இதுபோன்ற செயல்களுக்கு இந்திய கலாசாரம் அனுமதி கொடுப்பது இல்லை" என்றார்.
கடைசி வெளிநாட்டவராக சோனியா இருப்பார்
மேலும் சோனியா காந்தியை வெளிநாட்டவர் எனவும் விமர்சித்த தினேஷ் பிரதாப் சிங் இது தொடர்பாக கூறுகையில், "ரேபரேலியில் இருந்து வெளியேறும் கடைசி வெளிநாட்டவராக சோனியா காந்தி இருப்பார். ரேபரேலிக்கு வரும் போதெல்லாம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும் சோனியா காந்தி தனது மகனுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் செல்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் சோனியா காந்தி எம்.பியாக மாட்டார். ரேபரேலியில் இருந்து வெளியேறும் கடைசி வெளிநாட்டவராக அவர் இருப்பார். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி சுதந்திரம் பெற நாம் கடுமையாக போராடி இருக்கிறோம். எந்த ஒரு வெளிநாட்டினரையும் தங்கள் ஆட்சியாளராக இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார்.