கேரளா மீனவர்கள் கொலை வழக்கு: மற்றொரு இத்தாலி மாலுமி தாய்நாடு திரும்ப சுப்ரீம்கோர்ட் அனுமதி
டெல்லி: கேரளா மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் மற்றொரு இத்தாலி மாலுமி சால்வடோர் கிரோன் தாய்நாடு திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொச்சி கடல் பகுதியில் என்ட்ரிகா லெக்ஸி கப்பலில் வந்த இத்தாலி வீரர்கள் 2 கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் இத்தாலி மாலுமிகள் மிஸிமிலினோ லட்டோர், சல்வடோர் கிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் மாலுமி லட்டோர் உடல்நலக் குறைவை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்திடம் ஜாமீன் பெற்று இத்தாலி சென்றுள்ளார். இருப்பினும் இந்த வழக்கை இந்தியா கைவிட வேண்டும் என்று இத்தாலி வலியுறுத்தி வந்தது.
பின்னர் இது தொடர்பாக திஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் இத்தாலி முறையிட்டது. இதனை விசாரித்த பன்னாட்டு நீதிமன்றம், இத்தாலிய மாலுமி ஜாமீனுக்காக இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என தீர்ப்பளித்தது.
இதனடிப்படையில் மற்றொரு மாலுமி சால்வடோர் கிரோன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மாலுமி சால்வடோர் கிரோனுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கேட்டனர்.
சால்வடோர் கிரோனுக்கு ஜாமீன் அளிப்பதில் ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலுமி சால்வடோர் கிரோன் தாய்நாடான இத்தாலி செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications