மிக நெருக்கத்தில் வைத்து லெப்டினென்ட் கர்னல் வயிற்றில் 2 முறை சுட்ட தீவிரவாதிகள்!
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலின்போது கொல்லப்பட்ட லெப்டினென்ட் கர்னல் பி.ஜே.சிங்கை, மிக நெருக்கத்தில் வைத்து வயிற்றில் 2 முறை சுட்டுள்ளனர் தீவிரவாதிகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர். போலீஸ் ஸ்டேஷனையும், ராணுவ முகாமையும் அவர்கள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை தீவிரவாதிகளும் ராணுவ சீருடையில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த மோதலில் ராணுவத்தினர், போலீஸார் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இதில் ராணுவ லெப்டினென்ட் கர்னல் பி.ஜே.சிங்கும் ஒருவர் ஆவார்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் நேற்று இரவு பாகிஸ்தானிலிருந்து எல்லைப் பகுதி வழியாக ஊடுறுவி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நமது பாதுகாப்புப் படையினரின் கவனக்குறைவே இந்த ஊடுறுவலுக்கும், தாக்குதலுக்கும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. காரணம், எல்லைப் புறத்திலிருந்து ஜண்டி கிராமம் வழியாக ஊடுறுவிய தீவிரவாதிகள், ஜம்மு வரை வந்து கதுவா மாவட்டத்துக்குள் புகுந்துள்ளனர். அங்கு போலீஸ் நிலையத்தைத் தாக்கி போலீஸாரைக் கொன்று விட்டு ஒரு ஜீப்பை கடத்திக் கொண்டு அதில் சம்பா மாவட்டம் வரை போயுள்ளனர். அங்கு ராணுவ முகாமைத் தாக்கினர். இத்தனையும் 2 மணி நேரத்திற்குள் நடந்துள்ளது.
இத்தனைக்கும் ஜம்மு பகுதியில் உள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவினர், தீவிரவாதிகள் ஊடுறுவல் நடக்கலாம் என்று ஏற்கனவே எச்சரித்திருந்துள்ளனர். ஆனாலும் அதையும் தாண்டி இத்தனை தீவிரவாதிகளும் படு சாவகாசமாக வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
16 கேவல்ரி பிரிவின் முகாமுக்குள் புகுந்த தீவிரவாதிகள் முதலில் வாசலில் இருந்த சென்ட்ரியை சுட்டுக் கொன்றனர். பின்னர் உள்ளே புகுந்து ஆபிசர் மெஸ்ஸில் சரமாரியாக சுட்டுள்ளனர். சுடும்போது ஜிஹாதி கோஷங்களையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
ராணுவ லெப்டினென்ட் கர்னல் பி.ஜே.சிங்கை மிக நெருக்கத்தில் வைத்து வயிற்றில் 2 முறை சுட்டுள்ளனர். இதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். சிங், கேவல்ரி பிரிவின் 2வது நிலை அதிகாரி ஆவார்.
இந்தப் பிரிவின் கமாண்டிங் அதிகாரியை நெஞ்சிலும், தோள்பட்டையிலும் சுட்டனர். அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.