ஆட்சி அமைக்க போறீங்களா இல்லையா? பாஜக, பிடிபி.க்கு ஆளுநர் வோரா நாளை வரை 'கெடு'
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவை நாளைக்குள் தெரிவிக்குமாறு பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆளுநர் வோரா கெடு விதித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. மொத்தமுள்ள 87 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி - 27, பாஜக- 25, தேசிய மாநாடு- 15, காங்கிரஸ் 12 தொகுதிகளைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 45 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
3 மாத இழுபறிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) பாஜகவும் இணைந்து கடந்த ஆண்டு மார்ச்சில் கூட்டணி அரசை அமைத்தன. மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் நிர்மல் குமார் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

முதல்வராக இருந்த முப்தி முகமது சயீத் திடீரென காலமானார். இதனைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மெகபூபா முப்தி பதவியேற்கவில்லை. இதனால் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
குறிப்பாக கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்ட கொள்கைகளில் மெகபூபாவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தது. ஆயுதப் படை சட்டத்தை படிப்படியாக திரும்பப் பெறவேண்டும் என்பது மெகபூபாவின் நிபந்தனை. இதில் பாஜக மவுனம் காத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அளித்திருந்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜகவை மெகபூபா வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவை பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வோரா கெடு விதித்துள்ளார்.
மிரட்டும் மத்திய அரசு
ஆளுநரின் இந்த கெடு விதிப்பு என்பது மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மத்திய அரசு தரும் மறைமுகமான நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெறுவது மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது போன்ற மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் ஆளுநர் வோரா மூலமாக இந்நெருக்கடியை மத்திய அரசு கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications