சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது!
விஜயவாடா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெறுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அதிரடி முடிவுகளையும், உத்தரவுகளையும் அவர் அறிவித்து வருகிறார்.

சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு அருகே அமராவதி நதிக்கரையோரம் கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற அரசுக்கு சொந்தமாமன அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க அதிரடியாக உத்தரவிட்டார். இந்த கட்டடம் சுற்றுச்சூழல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"சட்டம் அனைவருக்கும் பொதுவானது. பொதுமக்கள் இதுபோன்று கட்டியிருந்தால், அதனை அரசு அகற்றிவிடும் அல்லவா? அதுபோலவே அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து, அடுத்ததாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான நர லோகேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஒரு வயது பேரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பும் திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மூலமாக சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீண்ட காலமாக இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறார். இசட் பிரிவு பாதுகாப்பு முறையின்படி, 23 ஆயுதம் ஏந்திய கமாண்டோ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனம் அடங்கிய 24 மணிநேர உயர் பாதுகாப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2+2 துப்பாக்கி ஏந்திய போலீசார் அடங்கிய குழுவினர் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க இருக்கின்றனர்.
அண்மையில் விஜயவாடா விமான நிலையத்தில் விவிஐபி கேட் வழியாக சந்திரபாபு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர் பயணிகளோடு, பயணியாக சாதாரண வழியில் விமான நிலையத்திற்குள் சென்று விமானம் ஏறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியது. இந்த நிலையில், அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications