இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா அமைச்சர் பதவிக்கு வாங்க.. இல்லாட்டி போய்கிட்டே இருங்க.. ஜெகன்மோகன் அதிரடி
அமராவதி: ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய கண்டிஷனை போட்டுள்ளார்.
ஆந்திர சட்டசபையில் 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து முதல் முறையாக அந்த மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் வயதை அனுபவமாக கொண்ட சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்தது ஆந்திர அரசியலை புரட்டி போட்டுவிட்டது.
இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து இந்தியாவிலேயே முதல்முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்துள்ளார் ரெட்டி.
25 அமைச்சர்கள்
இந்த 5 துணை முதல்வர்களும் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதையடுத்து இன்று ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. இதில் 25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதிய அமைச்சரவை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பதவியேற்பதற்கு முன்னர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய உத்தரவை பிறப்பித்தார். அதில் 25 பேரின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் தான். அதன்பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும்.
ஒட்டுமொத்த அமைச்சரவை
அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வருவது என்பது சாதாரண நடைமுறைதான். பொதுவாக சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டியோ ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்றுவதாக கூறியுள்ளார்.
அமைச்சர்கள் அதிர்ச்சி
இதற்கு சம்மதம் தெரிவித்து அமைச்சர் பதவியேற்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இல்லை நான் 5 ஆண்டுகாலம் அமைச்சராகத்தான் இருப்பேன் என அடம்பிடிப்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என ஜெகன்மோகன் ரெட்டி கண்டிஷன் போட்டுள்ளாராம். இதனால் இலவு காத்த கிளி போல் காத்திருந்து கடைசியில் இரண்டரை ஆண்டுதான் பதவிச்சுகமா என புதிய அமைச்சர்கள் அங்கலாய்த்து கொள்கின்றனராம்.