16 மாதத்திற்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஹைதராபாத்: சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி கடந்த 16 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.
கடப்பா எம்.பியான ஜெகன் மோகன் ரெட்டியை சிறைக்கு வெளியே திரண்டிருந்த பெரும் திரளான கட்சித் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
முன்னதாக திங்கள்கிழமையன்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது. ரூ. 2 லட்சம் ரொக்க ஜாமீனில் அவர் தற்போது விடுதலையாகியுள்ளார்.
சஞ்சலகுடா சிறையில் கடந்த 16 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தார் ரெட்டி. அவரது தலைமை இல்லாத நிலையில் அவரது சகோதரியும், தாயாரும் ஒய்எஸ்ஆர் கட்சியை நடத்தி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
தெலுங்கானா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ளன நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீனில் விடுதலையாகியிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.