அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க.. தங்கச்சி மீது பாசமே போச்சு! புலம்பிய ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் இருந்து முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின், மகன் ஜெகன்மோகன் ரெட்டி, மகள் சர்மிளா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. அதில் தன் சகோதரி மீது இருந்த அன்பு கரைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திராவுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்ற நிலையில் பாஜக - ஜன சேனா- தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தன.

ஆந்திராவை பொருத்தவரை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், அப்போதைய ஆளுங்கட்சியான முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும் களமிறங்கின. ஜெகன் மோகனுக்கு எதிராக அவரது சகோதரியே களமிறங்கியது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆந்திராவுக்கு ஏன் ஜெகன்மோகன் ரெட்டி தேவை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு தேவை இல்லை என அவரது சகோதரியான ஒய்எஸ் ஷர்மிளா பிரச்சாரம் செய்தார். ஜெகனின் தாயாரும் மகளுக்கே ஆதரவு அளித்தார்.
தேர்தலில் இருவருமே தோல்வியை சந்தித்த நிலையில், குடும்பத்தினர் இடையே இடைவெளி விழுந்தது. தற்போது அந்த இடைவெளி மேலும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது பல தொழில்களில் முதலீடு செய்திருந்தார். அந்த வகையில் சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவி பாரதி ரெட்டி ஆகியோர் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி உள்ளனர். அதில் தனது சகோதரி ஷர்மிளா மற்றும் விஜயலட்சுமி மற்றும் இரண்டு பேர் தங்கள் பெயரில் 2024ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக பங்குகளை மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அது தங்கள் நிறுவனத்தின் விதிகள் மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்க துறையால் ஜெகன் மோகனின் சில நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் நிலையில் அதில் சரஸ்வதி பவர் நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில் தான் தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி இருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அன்பு மற்றும் பாசம் காரணமாக சில சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளை ஷர்மிளாவுக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் நன்றி உணர்வு இல்லாமல் சர்மிளா நடந்து கொண்டதாகவும், தனது சகோதரி மீதான பாசம் மற்றும் அன்பு கரைந்து விட்டதாக கூறியுள்ளார் ஜெகன். தேர்தலில் தனக்கு எதிராக தனது சகோதரியே செயல்பட்டதால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்ததாக ஜெகன்மோகன் ரெட்டி கருத்துவதாகவும். இதன் காரணமாகவே சொத்து பிரச்சனையை அவர் கையில் எடுத்துள்ளதாக ஆந்திரா அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications