ஐ ஏ எஸ் அதிகாரியின் மகளுக்கு அரசு வேலை தந்த ஜெகன்மோகன்... ஏன் இப்படி செய்தார் தெரியுமா?
அமராவதி: முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியுடன் பலியான ஐ ஏ எஸ் அதிகாரி சுப்பிரமணியம் மகளுக்கு அரசு வேலை வழங்கி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா மாநில முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து, ஜெகன்மோகன் பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். அந்த வகையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். பல ஆண்டுகளாக நியாய விலை கடைகளில் நடந்து வரும் முறைகேடுகளை தடுக்கும் விதமாகவும், மக்களின் சிரமத்தை போக்குவதற்கும் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்துள்ளார். இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏழை மக்களை அதிகமாக பாதிக்கும் மதுப்பழக்கதை ஒழிக்க, மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக சட்டத்துக்கு புறம்பான மதுக்கடைகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், சொல்லாததையும் செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சியாக இருந்த போது, எதிர்த்த திட்டங்களையும், தூசி தட்டி வருகிறார்.
இதனிடையே, மனிதநேயத்துடன் ஒரு செயலை செய்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர முதல்வராக இருந்த ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியம் என்பவரும் பலியானார்.
இந்த நிலையில், ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியம் மகள் சிந்து வேலையின்றி தவிக்கும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு வேலை வழங்க உத்தரவிட்டார். அதன்படி சிந்துவுக்கு துணை ஆட்சியருக்கு இணையான அரசு பதவி வழங்கி, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications