வெளியிலிருந்து தூக்கி எறியப்படும் சிம், செல்போன்... திஹார் சிறை சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க முடி
டெல்லி: சிறைவளாகத்திற்குள் தடை செய்யப் பட்ட பொருட்களை வெளியில் இருந்து வீசுவதைத் தடுக்கும் வகையில், திஹார் சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லவோ, அல்லது அங்குள்ள கைதிகளுக்கு அளிக்கவோ தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், தடையை மீறிச் சிலர் சட்டவிரோதமான முறையில் அவற்றை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்கின்றனர்.
அந்தவகையில், நாட்டின் மிகவும் பாதுகாப்பு மிக்க சிறைகளில் ஒன்றாக திஹார் சிறையில் இத்தகைய அத்துமீறல்களைத் தவிர்க்கும் வகையில் அதன் சுற்றுச் சுவர் உயரத்தை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பொருட்கள்...
திஹார் சிறையில் சிறை எண் 1, 8 மற்றும் 9 ஆகியவை சாலையோரம் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி அமைந்துள்ளன. இந்த சுற்றுச் சுவரின் உட்பகுதியில் சமீபகாலமாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் டென்னிஸ் பந்து, காலுறை, சிறிய பொட்டலங்கள் ஆகியவற்றை சிறைக் காவலர்கள் கண்டு பிடித்தனர்.
மொபைல், போதைப் பொருட்கள்...
அவற்றை ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட மொபைல் போன் உதிரி பாகங்கள், சிம் கார்டு, பிளேடு, புகையிலை பொருட்கள் சிறை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக துக்கி வீசப் பட்டது உறுதி செய்யப்பட்டது.
கைதிகளின் உபயோகம்...
இவ்வாறு மர்மநபர்கள் வெளியில் இருந்து தூக்கி வீசும் பொருட்களை, கைதிகள் சிறை வளாகத்தில் நடமாட அனுமதிக்கும் போது எடுத்துப் பயன்படுத்துவது தெரிய வந்தது.
சுற்றுச்சுவர் உயரம் அதிகரிப்பு...
எனவே, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க திஹார் சிறையின் சுற்றுச் சுவரின் உயரத்தை 4 முதல் 5 அடி வரை அதிகரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கண்காணிப்பு பலம்...
மத்திய பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், சாலையை ஒட்டி உள்ள மூன்று சிறைகளின் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியை பலப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்...
அதேபோல், ‘சிசிடிவி' கேமராக்களின் எண்ணிக்கையையும், 500-ல் இருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தவும் சிறை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
பலகட்ட சோதனை...
இது தொடர்பாக திஹார் சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையின் நுழைவு வாயில்களில் பலகட்ட சோதனை நடத்தப் படுவதால், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது மிகவும் கடினம். அதனால், இப்பொருட்களை வெளியில் இருந்து துாக்கி வீசுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளனர்.
கம்பி வலை அமைப்பது...
மேலும், சுற்றுச் சுவர் உயரம் அதிகரித்த பின்பும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், அதற்கு மேல் கம்பி வலை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.