பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் கலசங்களை வாங்க ஆளே இல்லை-கொந்தளிக்கும் ஷ்ராவணபெலகோலா-களை இழந்த பெருவிழா
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஷ்ராவணபெலகோலா கோவிலில் கலசங்களை ஏலம் எடுக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
Recommended Video

பெங்களூரு: பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஷ்ராவணபெலகோலா கோவிலில் கலசங்களை ஏலம் எடுக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள சன்னராயபுரம் அருகே உள்ளது ஷ்ராவணபெலகோலா. இங்குள்ள பாகுபலி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது.
இதில் நாடு முழுவதிலும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பங்கேற்பார்கள். இந்நிலையில் மகாமஸ்தகாபிஷேக விழா வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விழா கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.

88வது விழா
இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைத்தார். முதல் மகாமஸ்தகாபிஷேக விழா 981ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு நடைபெறுவது 88வது மகாமஸ்தகாபிஷேக விழா ஆகும்.

புனித கலசங்கள்
இதனை முன்னிட்டு பாகுபலி சிலைக்கு அபிஷேகம் செய்வதற்கான கலசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பால், தேன், ஹெர்பல்ஸ், குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், தேங்காய் நீர் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்களுடன் இந்த கலசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிர்வாண சிலை
மகாமஸ்தகாபிஷேக விழாவை முன்னிட்டு பாகுபலி சிலைக்கு மேல் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு கலசத்தில் உள்ள நீர் ஊற்றி நிர்வாண பாகுபலி சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.

ஆர்வம் காட்டவில்லை
விழாவின் முதல் நாள் 108 கலசங்களும் விழாவின் இரண்டாம் நாள் 1008 கலசங்களும் பாகுபலி சிலையை ஊற்றி அபிஷேகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபிஷேகம் செய்யப்படவுள்ள இந்த கலசங்களை ஏலத்தில் வாங்க ஜெயின் சமூகத்தினர் ஆர்வம் காட்டவில்லை என கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியால் பாதிப்பு
அதாவது இந்த கலசங்களை ஏலத்தில் வாங்க ஜெயின் சமூகத்தினர் இடையே பெரிய போட்டா போட்டியே நடக்கும் என்ற அவர், இந்த ஆண்டு அவர்களிடம் ஆர்வம் குறைந்திருப்பதை காண முடிவதாக தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானம் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வருமானத்துக்கே போராட்டம்
வருமானத்துக்காக போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். ஏலத்தின் மூலம் பெறப்படும் பணம் கோவில் அறக்கட்டளை மூலம் இயங்கும் இலவச மருத்துவமனை, இலவச பள்ளி, இலவச உணவுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல் கலசம் ரூ.12 கோடி
இருப்பினும் முதல் கலசம் இந்த ஆண்டு 12 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருப்பதாகவும் அவர் கூறினார். இந்திய தொழில் அதிபர் ஒருவர் 12 கோடி ரூபாய் கொடுத்து முதல் கலசத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். இவர்தான் கடந்த 2006ஆம் ஆண்டும் முதல் கலசத்தை ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications