எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆணிவேரே "நாங்கதான்".. அடித்து சொன்ன.. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
தனிமனித மோதல் என்பது கட்சிக்கு சாபக்கேடான விஷயம். பாராத் ஜடோ யாத்திரை போன்ற இயக்கங்கள் இந்த சாபக்கேடுகளை உடைக்கும் என ஜெய்ராம் ரமேஷ் உறுதி.
ஸ்ரீநகர்: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்தான் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும். இதற்கு அடித்தளமாக காங்கிரஸ் கட்சிதான் இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது 14 மாநிலங்கள் 72 மாவட்டங்களை கடந்து 132 நாட்கள் பயணித்து தற்போது காஷ்மீர் வந்தடைந்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ் மேற்குறிப்பிட்டவற்றை கூறியுள்ளார். அவர் மேலும், கூறியுள்ளதாவது, "தேசிய அளவில் முன்னிலையில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்.
அந்த வகையில் எதிர்வரும் 2024ம் ஆண்டு காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் யதார்த்தம் இதற்கு ஒத்துழைக்காது. எனவே, யதார்த்தத்திற்கு ஏற்றவாறு தேர்தலை சந்திப்போம். தற்போது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை யாத்திரை நடைபெறுகிறது. அதேபோல குஜராத்தின் போர்பந்தரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் பரசுராம் குண்ட் வரை மற்றொரு யாத்திரை நடத்த யோசனையை வைத்திருக்கிறோம். ஆனால் இந்த யாத்திரை எப்போது சாத்தியமாகும் என்பது குறித்து தற்போது என்னால் சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
“கை” ஓங்குமா? அனல் பறக்கும் திரிபுரா மாநில தேர்தல்.. 17 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
கூட்டணி
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ஆணிவேராக காங்கிரஸ் இருக்கிறது. நாங்கள் மாநிலத்திற்கு மாநிலம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் காங்கிரஸ் கட்சி குடும்பம் இருக்கிறது. தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ்தான் மக்கள் மத்தியில் முன்னிலையில் இருக்கிறது. எத்தனை மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறார்கள், எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கிறார்கள் என்பதை கொண்டு ஒரு கட்சியின் செல்வாக்கை அளவிடுவது என்பது குறுகிய கண்ணோட்டமாகும்.
நிலைபாடு
காங்கிரஸின் நிலைப்பாடு/சித்தாந்தம் என்பது மய்யமாகும். மிகச்சரியாக சொல்வதெனில் காங்கிரஸை ஒரு மய்ய-இடதுசாரி கட்சி என்று கூறலாம். இதனைக் கொண்டுதான் பாஜவை நாங்கள் எதிர்க்கப் போகிறோம். நான் முன்னர் கூறியதை போல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்கிற எனது விருப்பம் 2024ம் ஆண்டு சாத்தியமாகமல் போகலாம். ஆனால் 2029ம் ஆண்டு சாத்தியமாகும். கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுத்திருப்பது கட்சியின் அமைப்பு கட்டமைப்பை உடைக்கும். ராகுல் காந்தி அடிக்கடி ஒன்றை கூறுவார், அதாவது முதலில் அமைப்பை கட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி அதிகாரத்தை கைப்பற்றும். எனவே நாங்கள் அமைப்பை கட்ட முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
சாபக்கேடு
இதற்கு முன்னர் கட்சிக்குள் சில சலசலப்புகள் உருவாகியிருந்தன. மோதல்கள் இருந்தன. ஆனால் இது எல்லாம் 'பாரத் ஜடோ யாத்திரைக்கு' பின்னர் மறைந்துபோயிருக்கிறது. இந்த யாத்திரையின் மூலம் நாங்கள் புதிய நோக்கத்தை கண்டறிந்துள்ளோம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையே ராஜஸ்தானின் அசோக் கெலாட், சச்சின் பைலாட் மோதல்களை எப்படி தீர்க்கப்போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், "இது ஒரு சாபம். தனிமனித மோதல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாபக்கேடு" என்று கூறினார்.
பூஸ்டர்
மேலும்,"தனிமனித சுயநலம் மற்றும் லட்சியங்களை கட்சி வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். அதற்கு இந்த யாத்திரை ஒரு உதாரணம். இந்த யாத்திரை கட்சிக்கு ஒரு பூஸ்டரை போல இருக்கிறது. தற்போதைய நிலைமைக்கும், இதே 5 மாதங்களுக்கு முன் கட்சி இருந்த நிலைமைக்கும் இடைய பெரும் வித்தியாசம் இருக்கிறது. கட்சி குறித்து பாஸிடிவாக பலர் பேசுகின்றனர்" என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு நாடாளுமன்ற தோல்வி, பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகியது போன்ற சலசலப்புகளுக்கு இடையில்தான் இந்த யாத்திரையை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.