ஜம்மு காஷ்மீரில் செம டிவிஸ்ட்.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. தேர்தல் கருத்து கணிப்பில் ஷாக் தகவல்
ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துள்ளது. கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி ஜம்மு காஷ்மீரில் எந்தக் கட்சிகும் பெரும்பான்மை கிடைக்காது என பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014ல் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 8 ம்தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவும் வெளியாக உள்ளது. ஹரியானாவில் இன்று தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகின்றன.
பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும். ஜம்மு காஷ்மீரில் மும்முனை போட்டி நிலவும் நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் கூட்டணி அடிப்படையில் தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 33-35 சீட்களும், பாஜக 23-27 சீட்களும், காங்கிரஸ் கட்சிக்கு 13-15 சீட்களும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 7-11 சீட்களிலும், ஏஜேபி 0-1 சீட்டும், மற்றவர்கள் 4-5 சீட்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வாக்கு சதவீதம் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 29%. பாஜக 24%, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 16%, காங்கிரஸ் கட்சி 14%, ஏஜேபி 5%, மற்றவர்கள் 12% வாக்கு பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடுமையான போட்டி நிலவினாலும், ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications