களையிழந்த பக்ரீத் பண்டிகை.. காஷ்மீரில் பதற்றம்.. எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருவதால் பக்ரீத் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சுமூக உறவு இல்லாததால் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளவில்லை.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ராணுவ குவிப்பு, 144 தடையுத்தரவு, இணையதளம், செல்போன் சேவை முடக்கம் என தொடர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.
மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது. எனவே எந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வந்ததை அடுத்து இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி காலை 8 மணி முதல் 9 மணி வரை 144 தடை விலக்கப்பட்டது. இந்த நேரத்தில் பண்டிகையை கொண்டாடி முடிப்பதற்குள் 144 தடை மீண்டும் விதிக்கப்பட்டது. இதனால் பெரிய மசூதிகள் மூடப்பட்டுவிட்டதால் மக்கள் தொழுகை நடத்த இயலவில்லை.
யாரும் கூட வேண்டாம் என போலீஸாரும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த நிலையில் குடும்பத்தினருடன் பக்ரீத் கொண்டாட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சிலர் தொழுகை நடத்த முடியாமல் ஏமாற்றமடைந்தனர். கும்பல் கூடி கல்வீச்சு சம்பவங்கள், கலவரம் ஆகியவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசூதிகளின் வாயிலில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
காஷ்மீரில் உள்ள தெருக்கள் பாலைவனம் போல் ஆள் அரவமின்றி காட்சியளித்தது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு இல்லாததால் வழக்கமாக இதுபோன்ற பண்டிகை நாட்களில் இனிப்பு பரிமாறி கொள்ளும் பழக்கம் நடைபெறவில்லை.