பாகிஸ்தான் வளையலோடு இல்லை- அணுகுண்டுதான் விழும்..ராஜ்நாத் சிங்கை எச்சரித்த பரூக் அப்துல்லா!
ஶ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் பேசியதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கொடுத்த பதிலால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை நாடு விடுதலை அடைந்த காலத்திலேயே பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது. இதனால் இன்னமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே நாம் அழைத்து வருகிறோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சீனாவும் லாவகமாக தனது நலன்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சி அமைந்தது முதலே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் மீண்டும் இணைப்போம் என்பது அறிவிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட வரைபடங்கள் உள்ளிட்டவைகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகள், 'இந்தியாவுடன்' இணைக்கப்பட்டவையாக காட்டப்பட்டிருந்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து டார்ஜிலிங் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கவலைப்படாதீர்கள்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடைய தேசத்தின் ஒரு பகுதிதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் முன்னேறி வரும் தேசத்துடன் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர் என கூறியிருந்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகள் என ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். நம்முடைய நிலப் பகுதியை இன்னொரு நாடு திருடிக் கொள்ள அனுமதிக்க முடியாது என கூறியிருந்தார்.
இந்த கருத்துகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். போய் இணைத்துக் கொள்ளுங்கள்.. யார் உங்களைத் தடுத்தது? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.. பாகிஸ்தான் நாடு ஒன்றும் வளையல்களை அணிந்து கொண்டிருக்கவில்லை.. பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அணு குண்டுகள் நம் மீது விழும். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.
ஆனால் பரூக் அப்துல்லாவின் இந்தப் பேச்சு, பாகிஸ்தானின் குரலாக - பாகிஸ்தானின் மொழியில் இருக்கிறது என பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications