வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ட்விஸ்ட்.. காஷ்மீரில் பாஜகவுக்கு 5 எம்எல்ஏக்கள்.. அது எப்படி தெரியுமா?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. அங்கு வரும் அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, அங்கு பாஜக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட 8 பேர் எம்எல்ஏ ஆகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. பல பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

காஷ்மீர் தேர்தல்: வரும் அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீரில் மொத்தம் 95 இடங்கள் உள்ள நிலையில், 48 இடங்களில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். இதற்கிடையே அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கும் முன்பே பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் 5 பேர் எம்எல்ஏவாக ஆகியுள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதாவது ஜம்மு காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், துணை நிலை ஆளுநருக்கே அதிகம் . ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019இன் கீழ் காஷ்மீரில் ஐந்து எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிப்பார். உள் துறை அமைச்சகம் 5 பேரைப் பரிந்துரை செய்த நிலையில், அதற்கு இப்போது துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
5 எம்எல்ஏக்கள்: இதன் மூலம் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 5 பேர் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளனர். இருப்பினும், இதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் ரவீந்தர் சர்மா கூறுகையில், "தேர்தல் முடிவுக்கு முன்னரே லெப்டினன்ட் கவர்னர் ஐந்து எம்எல்ஏக்களை நியமனம் செய்ததை ஏற்க முடியாது. இது ஜனநாயகம், மக்கள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மீதான தாக்குதலாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாநிலத்தில் ஆட்சி அமைந்த பிறகே எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டும்.
இதை எதிர்த்து காங்கிரஸ் நிச்சயம் போராடும். மக்களை சந்தித்துத் தேர்தலில் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட பாஜக, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தில் அமர முயல்கிறது. பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்" என்று விமர்சித்தார்.
அதிகாரம் இருக்கு: காஷ்மீரில் 3 கட்ட தேர்தலில் 90 சீட்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, காஷ்மீர் பண்டித்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (PoJK) அகதிகள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய ஐந்து உறுப்பினர்களை நியமிக்க லெப்டினன்ட் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதன் மூலம் காஷ்மீர் சட்டசபையின் மொத்த எண்ணிக்கை 95 ஆக அதிகரிக்கும். எனவே, பெரும்பான்மைக்கு 48 இடங்கள் தேவை என்ற சூழல் உருவாகும்.
காங்கிரஸ் கருத்து: இந்த 5 எம்எல்ஏக்களும் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் மாநில அமைச்சரவை ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் உள் துறை ஆலோசனையின் கீழ் நியமிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications