துண்டு துண்டானதே இந்தியா கூட்டணி! பாஜக அணிக்கு மீண்டும் ஓடும் 'காஷ்மீர் சிங்கம்' பரூக் அப்துல்லா?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. மேலும் எதிர்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகளை மறுப்பதற்கும் இல்லை என்கிறார் பரூக் அப்துல்லா.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. லோக்சபா தேர்தலுக்கான பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே இந்த அணியை கை கழுவிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடிவிட்டார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டன. இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் போய்விட்டது. இதனால் இந்தியா கூட்டணி என்ற அமைப்பு லோக்சபா தேர்தல் வரை நீடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஶ்ரீநகரில் இன்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறக் கூடும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் "இந்தியா" கூட்டணியின் காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால்தான் இம்முடிவை எடுத்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
அத்துடன் இந்த பேட்டியின் போதே, எதிர்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெறக் கூடும் என்பதையும் சூசகமாக தெரிவித்தார் பரூக் அப்துல்லா. வாஜ்பாய் காலத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications