பள்ளிக்கு வரும்போது ஹிஜாப்பும் கிடையாது.. பொட்டும் வைக்க கூடாது.. அடித்த ஆசிரியர்.. அதிரடி சஸ்பெண்ட்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் குங்குமம் அணிந்து வந்த இந்து மாணவி, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை கண்டித்து தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பிரச்சனை எழுந்தது. கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வந்த மாணவிகளை ஹிஜாப்புடன் அனுமதித்த ஆசிரியர்களான தேர்வறை கண்காணிப்பாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் திலகம், ஹிஜாப் அணிந்து வந்த 2 மாணவிகளை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் காதுரியன் ஊராட்சியி்ல அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிசார் அகமது என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் 4ம் வகுப்பு மாணவி ஒருவர் நவராத்திரி விழாவையொட்டி நெற்றியில் குங்குமம் இட்டு வந்தார். இன்னொரு மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார். இந்த மாணவிகள் இருவரையும் ஆசிரியர் நிசார் அகமது கண்டித்துள்ளார். மேலும் அவதூறான வார்த்தைகள் கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

வீடியோ வைரல்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் இந்து மாணவியின் தந்தை அக்ரேஸ் சிங் கூறுகையில், ‛‛மாணவியான என் மகள் தாக்கப்பட்டதுபோல் வேறு மாணவிகள் தாக்கப்படக்கூடாது.என் மகள் திலகம் அணிந்து சென்றதால் தாக்கப்பட்டுள்ளார். இது சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. உத்தரபிரேதசம், பீகார், கர்நாடகத்தில் இருந்து இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்'' என்றார். முஸ்லிம் மாணவியின் தந்தை முகமது சாகூர் கூறுகையில், ‛‛என்மகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகளை ஆசிரியர் மிதித்து கீழே தள்ளியுள்ளார்'' என குற்றம்சாட்டினார்.

ஆசிரியர் சஸ்பெண்ட்
மேலும் "குழந்தைகள் தாக்கப்பட்டது உண்மையா என்றும், அடித்ததற்கான குறிப்பிட்ட காரணங்கள் குறித்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி கோட்ரங்கா விசாரணை நடத்த வேண்டும் என ரஜோரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஆசிரியர் நிசார் அகமது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணை
இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதரீதியான ஆடை, அடையாளங்கள் தொடர்பாக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என அவர்கள் கூறினர். இருப்பினும் ஆசிரியர் மீது இந்திய தண்டனை சட்டம் 323, 325, 352, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் எனவும், சிறார் நீதிச் சட்டப்பிரிவு 23ன் படி குழந்தைகள் மீது குற்றம் இழைக்கும் நபருக்கு 6 மாதங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications