"ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய பவன் கல்யாண்.." ஆந்திர துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது ஏன்! பின்னணி
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சராக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அறிவிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது ஏன்.. இந்த தேர்தலில் அவரது பங்கு எந்தளவுக்கு முக்கியமானதாக இருந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரியளவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

பவன் கல்யாண்: ஆந்திரப் பிரதேச தேர்தலில் தெலுங்கு தேசம் பெற்ற வெற்றிக்குப் பவன் கல்யாண் பங்கு மிக முக்கியமானது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பே பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. அப்போதே ஆந்திர துணை முதல்வர் பதவிக்கு சந்திரபாபு நாயுடுவிடம் பவன் கல்யாண் விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு சந்திரபாபு நாயுடு ரெஸ்பான்ஸும் பாசிட்டிவாகவே இருந்ததாகத் தகவல் வெளியானது..
துணை அமைச்சர்: இதற்கிடையே இப்போது ஆந்திர துணை முதல்வராகப் பவன் கல்யாண் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாண் எதற்காகத் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
காரணம் என்ன: ஆந்திராவில் தெலுங்கு தேசம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றால் அதற்கு சந்திரபாபு நாயுடுவின் கூட்டணியே மிக முக்கிய காரணமாகும். இந்த கூட்டணியை அமைத்ததில் பவன் கல்யாண் பங்கு முக்கியமானது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான மனநிலை ஆந்திராவில் இருந்தாலும் அந்த எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் அது ஜெகனுக்கே சாதகமாக முடிந்துவிடும் என்பதை உணர்ந்து இந்த கூட்டணியை கட்டைமத்தால் பவன் கல்யாண்.
கடந்த 2018இல் தான் என்டிஏ கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறிய நிலையில், அவரை மீண்டும் பேசி கூட்டணிக்குள் அழைத்து வந்ததில் பவன் கல்யாண் பங்கு மிக முக்கியமானது. ஆந்திர தேர்தலில் மிகப் பெரியளவில் போட்டியிடப் பவன் கல்யாண் திட்டமிட்டிருந்த போதிலும், இந்த கூட்டணியால் அவர் பல சீட்களை தியாகம் செய்ய வேண்டி இருந்தது. இருப்பினும், ஜெகனை தோற்கடிக்க வேண்டும் என்பதால் அதையும் செய்துள்ளார் பவன் கல்யாண்.
தியாகம்: இதை அவரே பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உறுதி செய்திருந்தார். கூட்டணி அமையத் தியாகம் செய்ய வேண்டு இருந்ததாகவும் ஆந்திரா ஆபத்தில் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் அப்போது கூறியிருந்தார். மேலும், ஜெகனுக்கு எதிராக Save the state from Jagan என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார்.
மேலும், கடந்தாண்டு இறுதியில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது.. அவரை சந்திக்கச் சிறைக்கே நேரடியாகக் கிளம்பிவிட்டார் பவன் கல்யாண். பாதி வழியிலேயே போலீசார் அவரை தடுத்து நிறுத்திய நிலையில், அப்போது சாலையிலேயே படுத்துக் கொண்டு தர்ணா செய்தார் பவன் கல்யாண். இது மாநிலம் முழுக்க அக்கட்சிக்குத் தேவையான பூஸ்டை கொடுத்தது. இதெல்லாம் தேர்தலில் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.
துணை முதல்வர் பதவி: இப்படி பக்காவாக திட்டமிட்டுக் காய் நகர்த்தி ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றி கிடைப்பதை உறுதி செய்தவர் பவன் கல்யாண். இதன் காரணமாகவே அவருக்கு இப்போது துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அவருக்குப் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, வனத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அமைச்சரவையில் 25 பேர் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்ட ஒழுங்கை முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடன் வைத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷுக்கு தகவல் தொழில்நுட்பம், மனித வனத்துறை, ஐடி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மொத்தம் 25 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர தேர்தல்: லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் பவன் கல்யாண் மற்றும் பாஜக உடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திர சட்டசபையில் 175 இடங்கள் இருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் 135 சீட்களில் பவன் கல்யாண் கட்சி 21 சீட்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த ஜெகன் கட்சி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல லோக்சபா தேர்தலிலும் 25இல் 21 இடங்களில் இந்தக் கூட்டணி வென்றது. இப்போது மத்தியில் ஆட்சியை அமைத்துள்ள பாஜகவுக்கு அங்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் என்டிஏ கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு முக்கியமான தேவைப்படுவது. ஏனென்றால் என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்து 16 சீட்களுடன் தெலுங்கு தேசம் தான் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications