பார்மர் தொகுதியை ஒதுக்காவிட்டால் சுயேட்சையாக போட்டி- ஜஸ்வந்த்சிங் 'வார்னிங்'
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் தலைவலியை உருவாக்கியுள்ளது. தொகுதி ஒதுக்கீவு விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியைத் தொடர்ந்து ஜஸ்வந்த்சிங்கும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு குஜராத்தின் காந்திநகர் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டது. குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டால் மோடி ஆதரவாளர்கள் தோற்கடித்துவிடுவார்களோ என்று அஞ்சுவதாலேயே அவர் அடம்பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் மற்றொரு மூத்த தலைவரான ஜஸ்வந்த்சிங்கும் தாம் விரும்பும் தொகுதி கோரி பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் எம்.பியாக இருக்கிறார் ஜஸ்வந்த்சிங்.
ஆனால் தற்போதைய தேர்தலில் தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியை தமக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறார். இதற்கு அம்மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கடுப்பாகிப் போன ஜஸ்வந்த்சிங், தாம் போட்டியிடப் போகும் கடைசி தேர்தல் இது.. அதனால் சொந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். அப்படி என்னை போட்டியிட அனுமதிக்காவிட்டால் பார்மர் தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications