பாஜகவில் 'ஒரு மாதம்' லீவு கேட்ட ஜஸ்வந்த்சிங் மகன்! அமைச்சர் பதவிக்காக அப்பா- மகன் டிராமா?
ஜோத்பூர்: பாரதிய ஜனதாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் எந்நேரத்திலும் விலகக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வும் ஜஸ்வந்த்சிங் மகனுமான மன்வேந்திரா, பாஜக தலைமையிடம் 'ஒரு மாதம்' லீவு கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் தொகுதி சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் ஜஸ்வந்த்சிங். தீவிர அரசியலைவிட்டு சற்றே ஒதுங்கியிருந்தார் ஜஸ்வந்த்சிங். திடீரென தாம் போட்டியிடப் போகும் கடைசி லோக்சபா தேர்தல் இது.. இதனால் சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார் ஜஸ்வந்த்சிங்.
ஆனால் இதை பாஜக நிராகரித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த கேணல் சோனாராம் செளத்ரி பார்மர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எதிராக ஜஸ்வந்த்சிங் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

போலி பாஜகவினர்..
பாரதிய ஜனதாவை வந்தேறிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் உண்மையான பாஜகவுக்கும் போலி பாஜகவுக்கும் இடையேதான் இப்போது போராட்டம் நடைபெறுகிறது என்றும் ஜஸ்வந்த்சிங் சாடினார்.

நாளை வேட்புமனுத்தாக்கல்
மேலும் பார்மர் தொகுதியில் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் ஜஸ்வந்த்சிங் தெரிவித்திருந்தார்.

கட்சியில் லீவ் கேட்ட ஜஸ்வந்த் மகன்
இந்த நிலையில் ஜஸ்வந்த்சிங் மகனும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏவுமான மன்வேந்த்ரா, திடீரென தமக்கு "ஒரு மாதம்" லீவ் வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உடல்நலக் குறைவால் தமக்கு லீவ் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஜஸ்வந்த் சிங் மகன்.

காரணம் என்ன?
தீவிர அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த ஜஸ்வந்த்சிங் திடீரென போர்க்கொடி தூக்கியதற்கும் அவரது மகன் லீவு கேட்டு பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் பின்னால் 'அமைச்சர் பதவி'க்கான பேரம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஜஸ்வந்த் மகனுக்கு அமைச்சர் பதவி மறுப்பு
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்வந்த்சிங் மகன் மன்வேந்திராவுக்கு வசுந்தரராஜே சிந்தியா "அமைச்சர்" பதவி கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஜஸ்வந்த்சிங் மகனை வசுந்தரராஜே சிந்தியா கண்டுகொள்ளவில்லை. தற்போது லோக்சபா தேர்தலை முன்வைத்து கலககக் குரல் எழுப்பினால் இதற்கான பேரமாக 'மகனுக்கு அமைச்சர்" பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில்தான் ஜஸ்வந்த்சிங் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பதவிக்கான பேரம்?
அதாவது மகனுக்கு வசுந்தராஜே அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும்.. அதற்காக பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த்சிங் போட்டியிடக் கூடாது என்று பாஜக மேலிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்த்து காய்களை ஜஸ்வந்த்சிங் நகர்த்தி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படியுமா ஜஸ்வந்த்சிங் பேரம்?












Click it and Unblock the Notifications