ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு ஜனவரி 20 வரை அவகாசம்
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அசையும் சொத்துக்களை ஒப்படைக்க தமிழக நீதித்துறைக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியின் சென்னை கருவூலத்தில் உள்ளது.
இந்நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மனு தாக்கல் செய்திருந்தார்.
அசையும் சொத்துக்கள்
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களை டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா முன்னிலை யில் கடந்த 12-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பு உடைய ஜெய லலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளர் கர்நாடக அரசிடமும், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன்பிறகு தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உதவியோடு சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து பாதுகாப்பாக பெங்களூர் கொண்டு வர வேண்டும்'' என்றார்.
தமிழக அரசுக்கு கடிதம்
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற பதிவாளர் கடந்த வாரம் கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்திற்கு பதில் கிடைத்ததும், தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் வியாழக்கிழமை அனுப்பி இருக்கிறார்.
அக்கடிதத்தில், ''சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்புடைய தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்ட 1066 சான்று பொருட்கள் அடங்கிய அசையும் சொத்துகள் சென்னை மத்திய ரிசர்வ் வங்கியில் இருக்கிறது.
அதனை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வர தேவையான சட்டரீதியான நீதிமன்ற உதவிகளையும், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்பு வசதிகளையும், தகுதியான அரசு அதிகாரிகள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவையும் உடனடியாக வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
ஒரு மாதம் அவகாசம்
இந்த நிலையில், அசையும் சொத்துக்களை நிதிமன்றத்தில் ஒப்படைக்க, தமிழக நீதித் துறை அலுவலர்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.
இதையடுத்து, தமிழக நீதித் துறை அலுவலர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற, வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.