கோர்ட்டுக்கு கோடை விடுமுறை.. லீவில் போகாமல் ஜெ., வழக்கில் தீர்ப்பு எழுதுகிறார் குமாரசாமி!
பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையிலும், ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, தனது பணிகளை விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விசாரித்து வந்தார். விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக மார்ச் 11ம் தேதி அறிவித்தார் குமாரசாமி. எனவே ஏப்ரல் 30ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

மே 12வரை காலக்கெடு
ஆனால், பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்ததால், தீர்ப்பளிக்க மே 12ம் தேதி வரை காலக்கெடு கொடுத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து. இதையடுத்து அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு தரப்பு வாதங்கள் ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை நீதிபதி குமாரசாமி பரிசீலித்துக் கொண்டுள்ளார்.

நீதிமன்றத்துக்கு விடுமுறை
இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 4ம் தேதியில் இருந்து மே 29ம் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நீதிமன்றமும், நீதிமன்ற அலுவலகங்களும் செயல்படாது. இருப்பினும் அவசர வழக்குகளுக்காக மே 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் விடுமுறைகால சிறப்பு அமர்வுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமாரசாமி தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

காலை முதல் மாலைவரை
ஆனால் கோடைகால விடுமுறையாக தொடங்கினாலும், நீதிபதி குமாரசாமி, விடுப்பை எடுக்கவில்லை. நீதிபதி குமாரசாமி காலை 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்து, மாலை 5.30 மணி வரை வழக்கமான பணிகளை கவனித்து வருகிறார். வழக்கு குறித்த ஆவணங்களை வாசித்து, தீர்ப்பு எழுதும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

விடுமுறை பொருந்தாது
கோடைகால விடுமுறை நீதிபதி குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு நீதிமன்றத்துக்கு பொருந்தாது. எனவே அவர் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வந்து பணிகளை கவனிப்பார் என்று கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாமீன் கெடுமுடியும் முன்பு தீர்ப்பு
ஜெயலலிதாவின் ஜாமீன் கெடு மே 12ம் தேதிக்குள் முடிவதால், மே 11ம் தேதியே தீர்ப்பை வழங்கிவிட குமாரசாமி திட்டமிட்டு, தீவிரமாக தீர்ப்பு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே நீதித்துறை வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications