ஜெ. வழக்கில் சு.சுவாமி எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதாட அனுமதி, நேரடியாக முடியாது- நீதிபதி அதிரடி!
பெங்களூரு: ஜெயலலிதா மேல் முறையீட்டு விசாரணையில், சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக வாதிட அனுமதிக்க முடியாது என்று கூறிய கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு பெஞ்ச், அவர் பவானிசிங்கிற்கு உதவியாக எழுத்துப் பூர்வமாக வாதத்தை முன்வைக்க அனுமதி கொடுத்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் அன்பழகன் மனுவை முற்றாக புறக்கணித்த நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையில் ஒரு பகுதியை நிராகரித்து, ஒரு பகுதிக்கு அனுமதி கொடுத்தார்.
நீதிபதி குமாரசாமி கூறியதாவது: சுப்பிரமணியன் சுவாமி வழக்கின் முதல் புகார்தாரர் என்று குறிப்பிடப்படுவதால், அவரை வழக்கில் இணைத்துக்கொண்டு 3வது நபராக செயல்பட அனுமதிக்கலாம். அரசு வக்கீலுக்கு அவர் உதவிகரமாக செயல்படலாம். ஆனால் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாகவே அவர் அளிக்க வேண்டும். வாய்மொழியாக வாதிட அனுமதி கிடையாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
The Karnataka HC has accepted one of my two prayers viz., can file Written Submissions in the case.But not oral arg. I will go to SC on this
— Subramanian Swamy (@Swamy39) February 5, 2015
இதனிடையே, வாய்மொழி வாதாடலுக்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக சு.சுவாமி கூறியுள்ளார். அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.