ஜெ. வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவிக்கவே இல்லை- சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் நாகேஸ்வரராவ் வாதம்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக முதல்வர் ஜெயலலிதா சொத்துகளை குவிக்கவே இல்லை; இதை கர்நாடகா அரசு நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

10-வது நாளான நேற்றைய விசாரணையில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா ஆஜராகி, அன்பழகனின் மனுவை பரிசீலித்துதான் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது என வாதத்தை தொடங்கினார்.
அன்பழகன் தரப்புக்கு கடும் எதிர்ப்பு
இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் ஆட்சேபம் தெரிவித்து, இதுபோன்ற வழக்குகளில் யாரால் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறித்து சட்டத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் அன்பழகன் மேல்முறையீடு செய்ததில் அவருடைய உள்நோக்கம் மிகவும் தெளிவாக தெரிகிறது. அவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். அக்கட்சியின் பொதுச்செயலாளர்.
இந்த வழக்கில் ஏற்கனவே அரசு தரப்பில் 2 வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை வைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் ஆச்சார்யா போன்றோர் தங்கள் வாதத்தை முடித்து விட்டனர்.
ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தை தன்னுடைய தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது. கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் இரு வழக்கறிஞர்கள் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் பேசியதில் பல பொய்களும் தவறுகளும் இருந்தாலும் அவை எல்லாம் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
எனவே, இவர்கள் தேர்தல் நேர வசதிக்காக இப்படி நீதிமன்றத்தில் வந்து தங்களுக்கு வேண்டியதை எல்லாம் பேசி நீதிமன்றத்தைப் பிரசார மேடையாக்க முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்கக் கூடாது.
அன்பழகன் தரப்புக்கு இந்த வழக்கில் வாதாட எந்த முகாந்திரமும் கிடையாது. இதை அனுமதிக்கவும் கூடாது என்றார்.
நீதிமன்றம் மறுப்பு
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா, அன்பழகனுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளன என்று கூறினார்.
அப்போது நீதிபதிபதிகள் குறுக்கிட்டு, இந்த வழக்கில் மூல புகார்தாரர் யார்? யாருடைய புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது? இந்த வழக்கில் அரசாங்க தரப்பில் ஆஜராகி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது? ஏற்கனவே கர்நாடக அரசு தரப்பில் அனைத்து வாதங்களும் முன்வைக்கப்பட்டு உள்ளன. நீங்கள் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ள வாதங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் ஏற்கனவே கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்களால் வாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நீங்கள் இவற்றுக்கு அப்பால் என்ன கூறப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் பலரால் முன்வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே நமக்கு மிகவும் குறைந்த நேரமே உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து இருக்கிறோம். கணக்கில் உள்ள பிழைகள் பற்றி கர்நாடக அரசு தரப்பில் கூறி இருக்கிறார்கள். தீர்ப்பில் சில பிழைகள் உள்ளதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் அதையே மீண்டும் உங்கள் தரப்பில் எதற்கு கூறவேண்டும்? கூறி அன்பழகன் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.
கர்நாடகா மெனக்கெடவில்லை
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் தங்கள் தரப்பு வாதத்தை தொடங்கினார். அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:
இந்த வழக்கு அப்போதைய ஆட்சியினரால் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்டோரின் வருமானம் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்ட வருமானம் ஆகும். இதில் வருவாய்க்கு மீறிய சொத்து என்று ஏதுமில்லை என்று நிரூபிக்க எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. சட்டத்தின் அடிப்படையிலும் ஆவணங்களின் வலுவுடனும் நாங்கள் அதனை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.
விசாரணை அமைப்பு என்ற முறையில் கர்நாடக அரசு தரப்பு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதால், குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க எங்கள் தரப்பில் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில்தாக்கல் செய்தோம். ஆனால் எங்கள் ஆவணங்களை பயன்படுத்தி, கீழ்நீதிமன்றத்தில் தொடங்கி தற்போது உச்சநீதிமன்றம் வரை கர்நாடக அரசு எங்கள் தரப்பு மீது குற்றம் சாட்டி வருகிறது. அடிப்படையில் கர்நாடக அரசு எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற முறையில் எங்கள் தரப்பில் நாங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து எங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினோம். ஆனால் குற்றம் சாட்டும் விசாரணை அமைப்பு என்ற முறையில் கர்நாடக அரசு எதையும் செய்யவில்லை.
குற்றச்சாட்டை முன்வைத்ததோடு நிறுத்திக்கொண்டார்கள். குற்றச்சாட்டு தொடர்பான ஆவணம் என்ன? அந்த குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மைத்தன்மை உள்ளது என்பது போன்ற விஷயங்களை அவர்கள் முன்வைக்கவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நாங்கள் முன்வைத்த ஆவணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்களே தவிர அவர்களாக எதையும் செய்யவில்லை. எங்கள் தரப்பை காரணமின்றி அலைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் சாட்சிய சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டினார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் தன் வாதங்களை தொடருவார்.












Click it and Unblock the Notifications