ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் 3வது நபராக சேர்க்க கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி!
பெங்களூரு: சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3வது நபராக சேர்க்கக்கோரி க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்கள் மீது இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அன்பழகன் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராகி வாதிட்டார். தான்தான் முதல் புகார்தாரர் என்பதால் தன்னையும் மேல் முறையீட்டு வழக்கில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் தன்னையும் இந்த வழக்கில் 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
க.அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் சரவணன், ஹைகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நகலை நீதிபதியிடம் தாக்கல் செய்து வாதிட்டார். அரசு வக்கீலுக்கு உதவ எங்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.
ஆனால் ஜெயலலிதா தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி, அன்பழகன் தரப்பு வாதத்தையும், ஜெயலலிதா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார். இன்று காலையிலும் வாதம் தொடர்ந்ததால், மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பளிப்பதாக குமாரசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து குமாரசாமி அளித்த உத்தரவு: திமுகவின் அன்பழகன், இந்த வழக்கில் இருந்து அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அது விசாரணையில் இருந்துவருகிறது. இந்த நிலையில், அன்பழகன் தரப்பையும் வாதிட அனுமதித்தால், பவானிசிங்குடன் இணைந்து எப்படி அவரால் செயல்பட முடியும்?
மேலும் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்பழகனையும் இணைத்துக்கொள்வது சரியாக இருக்காது. எனவே அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.