ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருதி சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க வேண்டும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
புதிய மனுத் தாக்கல்..
அந்த மனுவில் கூறியிருந்தாவது:
இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் அரசியல் சட்டத்தின் கீழ் வரும் முதல்வர் பதவியை வகிப்பவர். அ.தி.மு.க. என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவி.
அச்சுறுத்தல்
விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளிட்ட சில தடை செய்யப்பட்ட இயக்கங்களால் ஏற்கனவே ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
காவிரி பிரச்சனை
மேலும் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பல ஆண்டு காலமாக இருந்து வந்த காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், காவிரி தீர்ப்பாயத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்து, தமிழகத்துக்கு ஆதரவாக பல தீர்ப்புக்களை பெற்றிருக்கிறார்.
உத்தரவாதம் இல்லை
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கன்னட அமைப்புக்களும், விவசாய அமைப்புக்களும் ஏற்கனவே தமிழக முதல்வரை எதிர்த்து பல போராட்டங்களையும், மறியல்களையும், பேரணிகளையும் நடத்தியுள்ளனர். எனவே கர்நாடக மாநிலத்தில் அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.
போலீஸ் கமிஷனரே சொல்கிறார்..
கர்நாடகத்தில் 25-ந் தேதி தொடங்கும் தசரா திருவிழாவுக்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அத்துடன் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியும் நடப்பதால், தீர்ப்புக்காக பெங்களூர் வரப்போகும் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று பெங்களூர் மாநகர போலீஸ் ஆணையர் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாமல் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்
பெங்களூரு நகர காவல் ஆணையரே ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தபோதும் கூட, குறித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் தீர்ப்பை பெங்களூரில் இல்லாமல் வேறு ஏதாவது மாநிலத்தில் வைத்து வழங்க உத்தரவிட வேண்டும். அல்லது தீர்ப்பு வழங்கப்படும் நாளில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு தள்ளூபடி
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், தமக்கு பாதுகாப்பு இல்லை எனில் ஜெயலலிதாதான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதனால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications