சொத்து குவிப்பு வழக்கு: 166 ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் ஜெ.
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் 166 ஆவணங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 23-ந் தேதி முதல் 2 நாட்கள் விசாரித்தது.
அப்போது ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி இறுதிவாதங்களை முன்வைத்தார். ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள கணிதப் பிழைகளை அவர் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
நீதிபதிகளோ, ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிலும் பிழை இருப்பதை சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டனர். மேலும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்து மார்ச் 10-ந் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புகள், சாட்சிகள் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை 166 தொகுப்புகளாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
60
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் 166 ஆவணங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.