சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.வை ஆஜராக உத்தரவிட்ட 'பொறுப்பு' நீதிபதி விரைவில் மாற்றம்?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வந்தார். அவரது பதவிக் காலம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
ஆனால் கடந்த வாரம் 'பொறுப்பு' நீதிபதியாக முடி கவுடர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு வழக்கை விசாரித்தார். அந்த விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை? வழக்கின் வாய்தா தேதியை தானே தீர்மானிப்பேன் என்றெல்லாம் கடுமை காட்டினார் அவர்.
அத்துடன் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் வரும் 30-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் முடி கவுடர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய சிறப்பு நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. இந்தப் பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும்.
இப்பட்டியலில் 'பொறுப்பு' நீதிபதி முடிகவுடர் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் புதிய நீதிபதி விரைவில் நியமிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் 30-ந் தேதி வழக்கை முடிகவுடர் விசாரிக்கமாட்டார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications