ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்க மே 11ம் தேதியை நீதிபதி தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீது வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குவதன் பின்னணியில், சில காரணங்கள் உள்ளன.
ஜெயலலிதா அப்பீல் மனு மீதான தீர்ப்பு வழங்க கரநாடக ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமிக்கு, மே 12ம் தேதிவரை கால அவகாசம் தந்திருந்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து.
தேவைப்பட்டால் மேலும் கால அவகாசத்தை கேட்டு பெறலாம் என்றும் குமாரசாமிக்கு சலுகை வழங்கியிருந்தார் தத்து.

திங்கள்கிழமை தீர்ப்பு
இந்நிலையில், மே 11ம் தேதி, திங்கள்கிழமை தீர்ப்பு வழங்க குமாரசாமி முடிவெடுத்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. தீர்ப்பு வழங்க திங்கள்கிழமையை தேர்ந்தெடுத்ததன் பின்னணியில், பாதுகாப்பு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு
வழக்கமாக, கோர்ட் அலுவல்கள் முந்தையநாள் மாலையில் பட்டியலிடப்படும். ஆனால், திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தால், முந்தைய இரு நாட்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக இருக்கும் என்பதால், வெள்ளிக்கிழமையே பட்டியலிடப்படும். இவ்வாறு 2 நாள் முன்பாக ஜெயலலிதா வழக்கு குறித்த தகவல் தெரிந்தால்தான், பெங்களூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிதானமாக கவனிக்க முடியும் என்பதை கோர்ட்டின் யோசனையாக இருந்துள்ளது.

போலீசாருக்கு கால அவகாசம்
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தபோது, சிறை வளாகம் அமைந்திருந்த பகுதியில் அதிமுகவினர் தர்ணா நடத்தினர். சிலர் தற்கொலை மிரட்டல்விடுத்தனர். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க 2 நாள் அவகாசம் போலீசாருக்கு உதவும் என்று கோர்ட் நினைக்கிறது.

கமிஷனர் ஆலோசனை
நேற்று இரவு, ஹைகோர்ட் பட்டியல் வெளியிடும் முன்பே, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தீர்ப்பு தேதி, அதிகாரப்பூர்வம் இல்லாத வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெங்களூர் கமிஷனர் ரெட்டி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருந்தனர். எனவே, பாதுகாப்பு காரணம் தீர்ப்பு தேதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜாமீனுக்கு முன்பாக..
மேலும், ஜெயலலிதாவுக்கு மே 12ம் தேதிவரை ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்த வழக்கு மே 12ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பை அதற்கு முன்பாகவே வழங்கிவிடுவது நல்லது என்று குமாரசாமி கருதியுள்ளதாக ஹைகோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications