ராகு காலம் முடிந்ததும் கோர்ட்டுக்குள் வந்தார் ஜெயலலிதா: அதிமுகவினர் மீது தடியடி
பெங்களூர்: ராகு காலம் முடிந்த பிறகு பெங்களூர் கோர்ட்டுக்குள் நுழைந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரை பார்க்க முந்தியடித்து கோர்ட் வளாகத்திற்குள் செல்ல முயன்ற அதிமுகவினர் தடியடி மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.
பெங்களூர் எச்.ஏ.எல் ஏர்போர்ட்டிலிருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதா மடிவாளா, பொம்மனஹள்ளி, ஹொசரோடு வழியாக பரப்பன அக்ரஹாராவுக்கு காரில் வந்தார்.
ஹொசரோடு என்பது ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கிருந்து இடது புறமாக திரும்பி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு ஜெயலலிதா காரில் வந்தார்.

இதனிடையே ஹொசா ரோடு முதல், பரப்பன அக்ரஹாரா வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாஸ் இல்லாத யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு செல்ல முயன்ற அதிமுகவினரை போலீசார் தடியடி மூலம் விரட்டியடித்தனர். போலீசாரை எதிர்த்து அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால் ஒசூர் ரோட்டில் பெரும் பரபரப்பும், டிராபிக் ஜாமும் ஆனது.

பரப்பன அக்ரஹாராவை சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் போலீசார் அளித்த பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 100 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ராகுகாலம் காலை 9 மணி முதல் 10.30 மணிவரை இருந்தது. ஜெயலலிதா கோர்ட் வளாகத்திற்குள் வந்தபோது மணி 10.45. எனவே அவர் ராகு காலத்தை கடந்தே கோர்ட்டுக்குள் வந்தார். அவர் ஹொசரோட்டை கடந்தபோது அங்கு குவிந்திருந்த அதிமுகவினர் அம்மா வாழ்க என கோஷமிட்டனர். அவர்களை காருக்குள் இருந்தபடியே பார்த்து கையசைத்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications