சொத்துக்குவிப்பு வழக்கு: நல்லமநாயுடுவின் அதிகாரம் தொடர்பான மனு மீது இன்று தீர்ப்பு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியின் அதிகாரம் தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தனியார் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடுவுக்கு, சொத்துக்களை முடக்குமாறு மனு செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவரது மனுவின் அடிப்படையில் சொத்துக்களை முடக்கியது செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மனுக்கள் மீதான வாத, பிரதிவாதங்கள் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.