கட்-அவுட்டுகள், கரை வேட்டி... குட்டி சென்னையாக மாறிய பெங்களூர்: போக்குவரத்தில் கடும் நெரிசல்
பெங்களூர்: தமிழக முதலவர் ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். அதிமுகவினர் குவிவதால் பெங்களூர்-ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பரப்பன அக்ஹாரா பகுதியிலுள்ள கோர்ட்டுக்கு ஜெயலலிதா வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் ஒசூர் சாலையின் பல பகுதிகளில் சாலையின் நடுவே பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.

அதில் ஜெயலலிதா போட்டோவுக்கு கீழே அதிமுக நிர்வாகிகள் புகைப்படங்களை பொறித்து, வெற்றி நமதே என்பது போன்ற வார்த்தைகளை இடம் பெறச் செய்துள்ளனர்.
மேலே கன்னடத்திலும், அதற்கு கீழே, தமிழிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் அணி அணியாக திரளுவதால் ஒசூர ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்குதான் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்த எலக்ட்ரானிக் சிட்டி உள்ளது. எனவே அங்கு வேலைக்காக செல்லும் ஐடி ஊழியர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழி பிதுங்கினர்.
தமிழக முதல்வர் வருகைக்காக கன்னட மக்கள் அவஸ்தை படுகிறோமே என்று ஆட்டோ டிரைவர்களும், பிறரும் வசை பாடிக்கொண்டே சென்றதை பார்க்க முடிந்தது.
கட்-அவுட், கரைவேட்டி, போன்றவற்றால் பெங்களூர் அதிலும் தெற்கு பெங்களூர் குட்டி சென்னையாக மாறிப்போயுள்ளது.












Click it and Unblock the Notifications