காவிரி வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா வக்கீலாமே..கர்நாடக சட்டசபையில் குமாரசாமி சர்ச்சை பேச்சு
பெங்களூர்: காவிரி வழக்கை விசாரித்த, நீதிபதிகளில் ஒருவர் ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞராக இருந்தவர், என்று பேச்சுக்கள் காதில் விழுந்ததாக கர்நாடக சட்டசபையில், மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி பேசினார்.
காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் மீது மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்வருமான, எச்.டி.குமாரசாமி கூறியதாவது:
காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வாழு.. வாழ விடு என்று கூறியிருந்தது. ஆனால், ஆனால் கர்நாடகாவை வாழ விடும்வகையில் அவற்றின் தீர்ப்புகள் இல்லை. விஷம் கொடுப்பதை போல தீர்ப்புகள் உள்ளன. தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதிபதிகளைதான் விமர்சனம் செய்ய கூடாது.
காவிரி வழக்கை விசாரித்த, நீதிபதிகளில் ஒருவர் ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞராக இருந்தவர் என்றெல்லாம் விவாதம் நடந்தது. அதுபற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை.
நீதிமன்றத்தை எதிர்க்க இன்று தீர்மானம் கொண்டுவரவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இல்லை. கர்நாடகாவிற்கு குடிநீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவுக்கு வேறு வழியில்லை. 6 ஆயிரம் தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட்ட அதே நீதிமன்றம்தான், மற்றொரு வழக்கில் ஒரு வார்த்தையை கூறியுள்ளது
"ஒரு நபரால் முடியாத விஷயத்தை செய்ய சொல்ல முடியாது. அவர் அதை நிறைவேற்ற முடியாமல் நீதிமன்ற அவமதிப்பாகாது" என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. கர்நாடகாவில் குடிக்க மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது. எனவே இது கோர்ட் அவமதிப்பு ஆகாது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக அரசு, மத்திய அரசுடனோ, சுப்ரீம் கோர்டுடனோ மோதல் போக்கிற்காக, இந்த சட்டசபை கூட்டப்படவில்லை. இதுவரை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உத்தரவை முழுமையாக மதித்து நடந்துள்ளோம். ஆனாலும், கர்நாடகாவுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தவண்ணம் உள்ளது. நாம் மதித்து நடப்பது பலவீனம் கிடையாது என்பதை காண்பிக்க இந்த தீர்மானம் அவசியப்படுகிறது. வட கிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யும் என வானிலை இலாகா கூறியபிறகும், தமிழகம் இன்னமும் கர்நாடகாவிடமே தண்ணீர் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தின் ஆசை நிறைவேறுவதேயில்லை. இவ்வாறு குமாரசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications