For Daily Alerts
Just In
ஜெ. உட்கார்ந்து கையெழுத்துப் போடுவதற்காக 'பார்ச்சூன்' காரில் வந்த 'வயர் சேர்'!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பெங்களூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வருகிறார். இதையெட்டி அவர் சிறை ஆவணங்களில் கையெழுத்துப் போடுவதற்காக, அவர் உட்காருவதற்காக சிறப்பு வயர் சேர் சென்னையிலிருந்து பார்ச்சூன் காரில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா விடுதலை தொடர்பான நடைமுறைகள் பெங்களூரில் தொடங்கி விட்டன. இன்று காலை முதல் இதுதொடர்பாக நடந்த சில லேட்டஸ்ட் நிகழ்வுகள் குறித்த தொகுப்பு:
- பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை உள்ள பகுதியில், சாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஜெயலலிதாவை வரவேற்கவும், அவரைப் பார்ப்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் சிறை வாசல் பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் அதிமுகவினர் மயமாக உள்ளது.
- காலை 10.30 மணிக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜாமீன் வழங்குவது தொடர்பான பணிகளைத் தொடங்குகிறார்.
- நான்கு பேருக்கும் ஜாமீன் உத்தரவாதம் அளிப்போரின் ஆவணங்கள் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்படும். அவர் அதை சரிபார்த்த பின்னர் ஜாமீன் வழங்கி உத்தரவிடுவார்.
- இதைத் தொடர்ந்து அவர்களை விடுவிக்கும் நடைமுறைகள் தொடங்கும். அனைவரும் வெளியே வர பிற்பகல் 2 மணியாகலாம் என்று தெரிகிறது.
- விடுதலையான பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் எச்.ஏ.எல். விமான நிலையம் செல்வார்கள். அங்கு சிறப்புவிமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்புவார்கள்.
- ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோப் படையினர் இன்று காலை நான்கு பார்சசூன் கார்களில் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.
- இதில் ஒரு காரில் ஜெயலலிதா அமருவதற்காக வயர் சேர் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதில் அமர்ந்துதான் ஜெயலலிதா சிறை ஆவணங்களில் கையெழுத்திடுவார்.
- ஜெயலலிதாவை வரவேற்பதற்காக தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் அதிமுகவினர் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் ஓசூரிலிருந்து பரப்பன அக்ரஹாரா வரை அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது.
- ஓசூர் முதல் பரப்பன அக்ரஹாரா வரை உள்ள ஓசூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு அதிமுகவினர் திரண்டு போய்க் கொண்டுள்ளனர்.
- ஜெயலலிதாவுக்காக பார்ச்சூன் காரில் வயர் சேரை தூக்கி வந்ததைப் பற்றி செய்தி வாசித்த ஒரு சேனலின் நியூஸ் ரீடர் இந்த செய்தியைப் படித்தபோதே விழுந்து விழந்து சிரித்ததையும் இங்கே சொல்லியாக வேண்டும்- இன்று காலையில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.!
Comments
English summary
Thousands of ADMK cadres are thronging Bangalore Parappana Agrahara jail to recieve their leader Jayalalitha.