சொத்து குவிப்பு வழக்கு: சசி, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தலா ரூ.10 கோடி அபராதம்
பெங்களூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்தார். கூட்டுச்சதியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991--ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தார் நீதிபதி டி.குன்ஹா.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. அவர்கள் அனைவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
2 தண்டனைகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையோடு கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 120 பிரிவின் கீழ் 6 மாதம் சிறைதண்டனை விதித்தார் நீதிபதி குன்ஹா. கூட்டுச்சதி குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. கூட்டுச்சதி குற்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை.