ராகுகாலம், எம கண்டம் இல்லாத நேரத்தில் ஜெ. வழக்கின் தீர்ப்பு: அதிமுகவினர் மகிழ்ச்சி
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு ராகுகாலம் மற்றும், எமகண்டம் இல்லாத நேரத்தில் வழங்கப்பட உள்ளதால் அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கடந்த 18 வருடங்களாக நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூர் பரபரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது.
காலை 11 மணிக்கு தீர்ப்பு
நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இந்த தீர்ப்பை வழங்குகிறார். காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பை படிக்க ஆரம்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகு காலம்
சனிக்கிழமையான நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ராகு காலம். எனவே 10.30 மணிக்கு மேல்தான் நீதிமன்ற வளாகத்துக்குள் ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம கண்டத்தில் தப்ப
தீர்ப்பு படிக்கப்படும் நேரத்தில் ராகு காலம் முடிவடைந்து விடுகிறது. அதேபோல எம கண்டமும், மதியம் 1.30 மணிக்கு துவங்கி மதியம் 3 மணிவரை இருக்கிறது. எனவே அதற்குள் தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதிமுகவினர் மகிழ்ச்சி
அதிமுகவிலுள்ள சில நிர்வாகிகள் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். சகுணம் பார்ப்பவர்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு ராகு காலம் முடிந்த பிறகு வழங்கப்படுவதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கு என்னவாகும்?
இதனிடையே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்த மனுவை இன்று மதியம் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. அந்த மனு மீது நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.