1 ரூபாய் சம்பளம் வாங்கியதால் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியரே.. கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி திட்டவட்டம்
பெங்களூரு: ரூ.1 சம்பளம் வாங்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தது எப்படி என்பது குறித்து வாதத்தை முன்வைக்குமாறு, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மீண்டும், ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் குமார் வாதிடுகிறார். வழக்கு விசாரணையின் 28வது நாளான இன்று குமார்வாதிடுகையில், இது அரசியல் காரணங்களால் தொடரப்பட்ட வழக்கு என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி "இவ்வாறு பொதுவாக ஒரு வாதத்தை முன்வைக்காதீர்கள் என்று பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன். அரசியல் சார்பான ஒரு குற்றச்சாட்டு என்றால் வழக்கு எப்படி 18 வருடங்கள் நடந்திருக்க முடியும்? அப்படியே நீங்கள் கூறுவது உண்மைதான் என்றாலும், அதற்கான ஆதாரத்தையாவது முன்வையுங்கள்.
மேலும், ஜெயலலிதா ரூ.1 சம்பளம் பெற்று முதல்வராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளீர்கள். அப்படியிருக்கும்போது, ரூ.66 கோடி சொத்துக்களை எப்படி சம்பாதித்தார், அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து வாதத்தை முன்வையுங்கள். ஜெயலலிதா சம்பளமே வாங்காமல் பணியாற்றினால் அது வேறு. ஆனால் ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதால் அவர் அரசு ஊழியராகவே கருதப்படுவார். எனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின்போது, அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாகவே பார்க்க வேண்டிவரும்" என்று நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து வாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications